முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் மனம் வருந்துவதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த போது, எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழக்கை கைவாங்குவதாக முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து மேன் முறையீட்டு நீதிமன்றம் குறித்த வழக்கை முடித்து வைத்திருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 'டெனீஸ்வரனுடனான வழக்கு விவகாரம் ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளதாக' தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு மனம் வருந்துவதாக பதிவிட்டுள்ளார்.நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் கைலாகு கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'அன்புக்குரிய நீதியரசர் அவர்களே! தங்களுடைய மனம் நோகும்படியாக நான் நடந்திருந்தால், அதன்பொருட்டு மனம் வருந்துகிறேன்...... அன்புடன் டெனிஸ்' என குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, வட மாகாணம்