இலங்கையில் சா்வதேச விமான நிலையங்கள் 2021 ஏப்ரல் வரை வெளிநாட்டுப் பயணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இரண்டு சா்வதேச விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க இவ்வளவு நீண்ட காலம் ஆகாது என சுற்றுலா அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் அனுரா குமார தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான திகதியை அமைச்சு இறுதி செய்யவில்லை. எனினும் அடுத்த ஆண்டுவரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்காது எனவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மூடப்பட்டுள்ள இலங்கையின் இரண்டு சா்வதேச விமான நிலையங்களையும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் திறக்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சு நம்புவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் அனுரா குமார தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பி அழைத்துவருவது குறித்துக் கவனம் செலுத்திவருவதால் விமான நிலையங்களைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மாத்தளை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் கடந்த மார்ச் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கமந்த ஆகஸ்ட் மாதத்தில் விமான நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தினுடன் தொடர்புடைய அதிகளவு கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டது.
பின்னர் இம்மாதம் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் தொற்று நோய் ஆபத்து தொடர்ந்து நீடிப்பதால் அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.