பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற அதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் தொகையும் உயர்ந்து வருகிறது.
பிரான்ஸில் நேற்று புதன்கிழமை 9,784 புதிய தொற்றுநோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். சனிக்கிழமை பிரான்ஸில் இதுவரை பதிவானவற்றில் மிக உச்ச அதிகரிப்பாக 10,561 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 4 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.
இது மேற்கு ஐரோப்பாவில் ஸ்பெயினுக்கு அடுத்து இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
இதேவேளை, பிரான்ஸில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் நேற்று 803 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வைரஸ் நாட்டின் சில பகுதிகளில் விரைவாகப் பரவி வருவதாக ஊடகவியலாளர்களிடம் நேற்றுக் பேசிய பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
தொற்று நோயைக் கட்டுப்படுத்த அனைவரும் உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 46 போ் நேற்று பிரான்ஸில் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த இறப்புக்களின் எண்ணிக்கையும் 31,045 ஆக உயர்ந்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு