ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமையும் 300-ஐ நெருங்கிய கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மொத்தம் 293 புதிய தொற்றுநோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாணத்தில் புதன்கிழமை 315 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இந்த எண்ணிக்கையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.
எனினும் கடந்த 7 நாட்களில் தினசரி புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை சராசரி 260 என்ற அடிப்படையில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒன்ராறியோவில் வியாழக்கிழமை மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மாகாணத்தில் மொத்த மரணங்கள் 2,825 ஆக அதிகரி்த்துள்ளது.
நேற்று ரொராண்டோவில் 85 பேரும், பீல் பிராந்தியத்தில் 63 பேரும் ஒட்டாவாவில் 39 தொற்று நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,676 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று நோய் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் மாகாணத்தில் தொற்று மையங்களான ரொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்தியங்களில் தடுப்பு கட்டுப்பாடுகள் இன்றுமுதல் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் மூடப்பட்ட உட்புறங்களில் 10 பேரும் திறந்த வெளிப்புறங்களில் 25 பேருக்கும் மேல் ஒன்றுகூட இன்றுமுதல் தடை விதிக்கப்படும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா