இலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது.
கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர் பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத்தினை பெற்றுக்கொள்வதற்கு அல்லது சேவையை பெற்றுக்கொள்வதற்கு இலகுபடுத்தலாக குறித்த இலத்திரணியல் குடும்ப அட்டை பயன்தரவுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் பிரஜை குறித்த இலத்திரணியல் அட்டையை சமர்ப்பிக்கும்போது இலகுவாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். அதில் வாழ்வாதாரம், வீடு, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தேவையுடையவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் இன்றுமுதல் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் தமது குடும்ப விபரங்களை இலத்திரணியல் இலகுபடுத்தலின் ஊடாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது, குறித்த இலத்திரணியல் குடும்ப அட்டையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிற்கு குறித்த இலத்திரணியல் அட்டை வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நாளின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஜி எஸ் செனெரத்யபோ, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன், 571வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் டி கே எஸ் கே டொலகே, 572வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டி எம் பி பி டசநாயக, கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,
இயந்திர வடிவில் சேவைகளை வழங்க ஆரம்பித்துவிட்டு மக்களுடன் நட்புறவை விட்டுவிடாதீர்கள் அரசாங்க அதிபர் என தெரிவித்தார். இவ்வாறான இலகுபடுத்தல் வேலைத்திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் முதல் முதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முதலாக என்றும் கூறலாம். அவ்வாறு கண்டாவளை பிரதேச செயலகம் மக்கள் சேவையை இலகுபடுத்துவதற்காக இவ்வாறான முயற்சியை எடுத்துள்ளமையை நான் பாராட்டுகின்றேன்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் சேவையாற்றும்போது அவரது சிறந்த செயற்பாடுகளை நான் கவனித்திருந்தேன். அதுபோன்று தற்போது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கான இலத்திரணியல் குடும்ப விபர அட்டையை முதல் முதலாக ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறான இலத்திரணியல் முறையினை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கும், ஏனைய பிரதேச செயலகத்திற்கும் அறிமுகம் செய்ய உள்ளோம். இவ்வாறான செயற்பாடுகள் இலகுபடுத்தலிற்கு உதவியாக இருக்கும். இயந்திர முறையில் சேவைகளை வழங்குவதோடு நிறுத்திவிடாது மக்களுடன் நட்புறவான சேவையை முன்னெடுக்க வேண்டும். எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கிராமமட்ட உத்தியோகத்தர்கள், கண்டாவளை பிரதேச செயலக குடும்பம் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், ஆரம்பத்துடன் நிறுத்திவிடாது மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி