இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டு மீன் வாடி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பத்தலங்குண்டு தீவுக்குப் பக்கத்திலுள்ள பரமுனை தீவுப் பகுதியில் இருந்து 32 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மீன் வாடியொன்றிலிருந்து 15 பொதிகளில் அடைக்கப்பட்ட 32 கிலோ 145 கிராம் கேரளக் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக விற்பனை செய்யும் நேக்கில் கொண்டுவரப்பட்ட குறித்த கேரளக் கஞ்சா மிகவும் சூட்சகமான முறையில் மீன்பிடி ஓலைக் குடிசை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன், கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.