தியாகதீபம் திலீபன் நினைவேந்தலுக்கான தடையை நீக்கக்கோரி இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கையில் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முன்வந்திருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
நேற்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தினதும் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.
இருந்தபோதிலும் நேற்றைய சந்திப்பில் பங்கெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் பங்கெடுக்காமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த சுரேஷ் பிறேமச்சந்திரன் கஜேந்திரகுமாரோடு தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சற்று முன்னர் வெளியாகியுள்ள நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் தடை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு தமிழ்க்கட்சிகளால் கோரிக்கை முன்வைத்து அனுப்பப்படவுள்ள கடிதத்தில் கையொப்பமிட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணங்கியிருப்பதாக தெரியவந்திருந்தது.
பிந்திய தகவல்களின்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் காண்டீபன், சுகாஸ் ஆகியோர் தற்போது தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இலத்தில் சந்திப்பில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைந்திருப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்களும் மக்களும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே இன்று காலை தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தியிருப்பதாகவும் அதன் தொடராகவே இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்