தாய்வானை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் 18 போர் விமானங்கள் தாய்வான் எல்லைவரை வந்து நேற்று வெளியேறிய நிலையில், சீன விமானங்கள் எல்லைக்குள் நுழைந்தால் அவற்றைச் சுட்டு விழுத்துவோம் என தாய்வான் எச்சரித்துள்ளது.
அத்துடன் போர் விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை தனது எல்லையில் தாய்வான் நிறுத்தியுள்ளது.
சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் சிறிய தீவான தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது.
ஆனால் தாய்வான் இதனை உறுதியாக மறுத்து வருகிறது. நாங்கள் எப்போதும் சுதந்திரமான தனி நாடு என்று அந்நாடு கூறி வருகிறது.
தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். நாங்கள் சுயமரியாதை நிரம்பிய நாட்டு மக்கள். சீனாவின் ஆதிக்கத்தை எப்போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா எங்கள் மண்ணில் சிறிய இடத்தை கூட சீனா ஆக்கிரமிக்க நாங்கள் விட மாட்டோம். சீனாவின் ஆதிக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில் தாய்வான் அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகிறது. இதனால் சீனா – தாய்வான் இடையே மோதல் போக்கு மேலும் வலுவடைந்துள்ளது.
இதேவேளை, ட்ரம்புக்கு நெருக்கமான அமெரிக்க உயர் அதிகாரிகள் பலா் நேற்று தாய்வானுக்கு சென்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்தது சீனாவை கடுமையாக ஆத்திரமூட்டியுள்ளது.
இதனையடுத்தே தாய்வான் மற்றும் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் சீனா நேற்று போர் விமானங்களை தாய்வான் எல்லைக்கு அருகே அனுப்பியது,
ஆனால் தங்கள் எல்லைக்குள் சீன விமானங்கள் நுழைந்தால் சுட்டு விழுத்துவோம் என தாய்வான் எச்சரித்திருந்த நிலையில் தாய்வான் எல்லை வரை சென்று அச்சுறுத்தும் போக்குக் காட்டிவிட்டு சீன விமானங்கள் திரும்பின.“
இதனையடுத்தே தனது எல்லைகளில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் குவித்துள்ள தாய்வான், சீன விமானங்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு விழுத்துவோம் என எச்சரித்துள்ளது.