இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் தாய்வான் தொடர்ந்தும் வலுவான உறவுகளைப் பேணும் என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் கீத் கிராச் 3 நாட்கள் பயணமாக தாய்வானுக்கு கடந்த வியாழக்கிழமை சென்றார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு இரவு விருந்தளித்த தாய்வான் ஜனாதிபதி, அமெரிக்காவுடனான உறவுகளை தொடர்ந்து வலுவாகப் பேண உறுதியளித்தார்.
தனது 18 போர் விமானங்களை தாய்வான் எல்லை வரை அனுப்பி நேற்று சீனா எச்சரித்த அதே நாளில் சீனா-தாய்வான் தலைவா்கள் தங்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மறைந்த தாய்வான் முன்னாள் ஜனாதிபதி லீ டெங்-ஹுய் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்தமைக்காக அமெரிக்க குழுவினருக்கு தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நன்றி தெரிவித்ததாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு தசாப்தங்களின் பின்னர் அமெரிக்காவின் மிக மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவா் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தாய்வானும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என நம்புவதாக தாய்வான் ஜனாதிபதி தெரிவித்தார்.
தாய்வான் – அமெரிக்கா இடையிலான உறவில் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், நம்பகமான பங்காளிகளாக எங்கள் உறவை மேம்படுத்தவும், இரு நாடுகளும் இணைந்து எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்கவும் முடியும் என்றும் நான் நம்புகிறேன் எனவும் ஜனாதிபதி சாய் இங்-வென் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் உறுதியாக்க தாய்வான் உறுதிபூண்டுள்ளது என இதன்போது சாய் கூறினார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தாய்வானை அச்சுறுத்தும் வகையில் தென் சீனக் கடலில் சீனா மேற்கொண்டுவரும் போர்ப் பயிற்சிகள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.