இலங்கையில் எந்தக் காரணத்துக்காகவும் அரிசி விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்க போவதில்லை என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுமாக இருந்தால், தேவையான அளவு அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விலையைத் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
'ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசி விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் நெல்லை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று தெரியவருகின்றது.
ஆனால், அவ்வாறாக எந்தவகையிலும் விலை அதிகரிப்பை அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறாக நெல்லைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் யார் என்ற தகவல்களும் எங்களிடம் உள்ளன.
இவர்களால் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் அமைச்சரவையின் அனுமதியுடன் தேவையான அரிசியை இறக்குமதி செய்து தொடர்ந்தும் விலைக் கட்டுப்பாட்டை பேணுவோமே தவிர விலையை ஒருபோதும் அதிகரிக்கமாட்டோம்" - என்றார்.