மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்னெடுக்கவுள்ள தூயசக்தித் தொழிநுட்பத்திற்கான முதுமானிக் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான செயற்றிட்ட அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
தூயசக்தித் தொழிநுட்பம் தொடர்பில் இலங்கையில் தொடக்கப்படும் முதலாவது முதுமானிக் கற்கைநெறி இதுவென்பது இதன் சிறப்பம்சமாகும்.
எதிர்காலத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கையில் இக்கற்கைநெறியின் தொடக்கமானது இலங்கையில் தூயசக்தி உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிப்பதற்கு வலுச்சேர்க்கும். தேர்ச்சியும் வினைத்திறனும் அறிவும் கொண்ட பணியாளர்கள் தூயசக்தி தொழிநுட்பத்தின் பரவலுக்கு அவசியமாகும். அத்தேவையை அறிந்து அதைப் பூர்த்திசெய்து கேள்விச்சந்தைக்குரிய மனிதவளங்களை தரத்துடன் வழங்குவதும் இக்கற்கைநெறியின் நோக்கமாகும் என மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து இதற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்துள்ளன. இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வளவாளர்கள் விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளார்கள்.
இக்கற்கையில் சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முதுதத்துவமாணி / கலாநிதிப் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வாய்புக்கள் வழங்கப்படும். அவ்வாய்ப்புக்களைப் பெறும் மாணவர்கள் நோர்வேஜியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்காலங்களைப் பெறுவார்கள்.
இந்த முதுமானிக்கற்கை நெறியானது இரண்டு வகைப்பட்டது. ஒன்று ஓராண்டுகால கற்கைகளை மட்டும் கொண்ட தூயசக்தித் தொழிநுட்ப முதுமானி (Master of Clean Energy Technologies) மற்றையது, கற்கைகளுடன் ஆய்வும் இணைந்த இரண்டாண்டுகால தூயசக்தித் தொழிநுட்ப விஞ்ஞான முதுமானி (Master of Science in Clean Energy Technologies). மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலகளாவிய கல்வி ஒத்துழைப்புக்கான நோர்வேஜிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாகவும் இலங்கையில் உள்ள நோர்வேஜியத் தூதராலயத்தின் ஊடாகவும் பெற்றுக்கொண்ட நிதியுதவியிலேயே இந்த கற்கைநெறிகள் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த மேலதிக விபரங்களை http://project.jfn.ac.lk/hrncet/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.