கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் 91-ஆவது வயதில் காலமானார்.
வெறும் 79 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்து அவரது தலைமையில் 1984-இல் லிபரல் கட்சியை மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.
வழக்கறிஞரான ஜோன் டர்னர், 1968 முதல் 1975 வரை கனடாவின் நீதி மற்றும் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.
அதனைத் தொடர்ந்து அப்போதைய லிபரல் கட்சித் தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோவுடன் முரண்பட்டுக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் சட்டத்தரணியாக தொழிலை முன்னெடுத்துவந்த ஜோன் டர்னர், அதன்பின் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் லிபரல் கட்சித் தலைமைக்குப் போட்டியிட்டு வென்றார்.
தொடர்ந்து தோ்தலுக்கு அழைப்பு விடுத்த அவரது தலைமையில் லிபரல் கட்சி வரலாற்றில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.
282 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் முன்னர் 135 இடங்களை வென்ற லிபரல் கட்சி, ஜோன் டர்னர் தலைமையில் சந்தித்த இந்தத் தேர்தலில் வெறும் 40 இடங்களை மட்டுமே வென்று மோசமான தோல்வியடைந்தது.
இந்தத் தேர்தலில் பிரையன் முல்ரோனியின் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 211 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது.
கட்சி மோசமான தோல்வியைத் தழுவியபோதும் கட்சித் தலைவர் பதவியில் ஜோன் டர்னர் தொடர்ந்தார். பின்னர் 1988 நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அவா் தோல்வியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து 1990 -இல் லிபரல் கட்சித் தலைவர் பதவியை ஜோன் டர்னர் ராஜினாமா செய்தார்.
வெறும் 79 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்ததன் மூலம் நாட்டில் இரண்டாவது மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி விகித்தவராக ஜோன் டர்னர் பதிவானார்.
ரொராண்டோவில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு ஜோன் டர்னர் இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.