சீனாவுக்கான உளவு பார்த்ததாக பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமது ஊடகத்தில் பணியாற்றியதற்காக அவா் திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவுக்காக உளவு பார்த்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சீனாவுக்கு அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, ராஜீவ் சர்மா கடந்த 14ஆம் திகதி டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில், இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக இந்திய பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டது.
அவருக்கு உதவியாக சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் நேபாளத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் செப்டம்பர் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஹவாலா பரிமாற்ற முறையில், சீன உளவு துறையினரிடம் தகவல்களை கொண்டு சேர்க்க ராஜீவ் சர்மாவுக்கு உதவினார்கள் என்று டெல்லி பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவர்கள் மூவர் மீதும் அலுவல்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் பதற்றம் காரணமாக இந்திய தரப்பு இந்த விடயத்தை பெரிதுபடுத்துகிறதா? என குளோபல் ரைம்ம் தலைமை ஆசிரியர் ஹூ ஷிஜின் எழுதியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு உலகம் முழுவதும் சுயாதீன பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள அறிவுஜீவிகள் பொதுவாகவே ஆங்கிலத்தில் நன்றாக எழுதக் கூடியவர்கள் குளோபல் ரைம்ஸ் பத்திரிகை ஆங்கிலப் பதிப்பு தொடங்கப்பட்ட காலம் முதலே எங்களுக்காகப் பணியாற்றி வரகின்றனர் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
61 வயதாகும் ராஜீவ் சர்மா இந்தியாவில் இருந்தவாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.