உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆறு மாதங்களுக்கும் பின்னர் கொரோனா வைரஸ் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் இன்று காலை மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹாலுடன் ஆக்ரா கோட்டையும் இன்று திறக்கப்பட்டது.
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து ஆக்ராவில் உள்ள இரு உலக பாரம்பரிய தளங்களும் கடந்த மார்ச் 17 முதல் மூடப்பட்டன.
இந்நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள தாஜ்மஹாலை பார்வையிட ஒவ்வொரு நாளும் 5,000 சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணிக்கு முன் 2,500 பேரும் 2 மணிக்குப் பின்னர் 2500 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆக்ரா கோட்டையில் தினமும் 2,500 சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆக்ரா பகுதிக்கான கண்காணிப்பாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாரம்பரிய தளங்களுக்குச் செல்லும்போது சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளி பேணுதல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்களை இணையத்தின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். நேரில் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கிய சுற்றுலாத் தளமாகவுள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 இலட்சம் பேர் அங்கு செல்கின்றனர்.
ஆக்ரா கோட்டையை வருடந்தோரும் கிட்டத்தட்ட 30 இலட்சம் போ் பார்வையிடுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தக்கு முக்கிய வருவாயை ஈட்டித் தருவதில் இந்தச் சுற்றுலாத் தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் வரலாற்றில் முதல் தடவையாக 6 மாதங்களாக தாஜ்மஹாலுடன் ஆக்ரா கோட்டையும் மூடப்பட்டிருந்த நிலையில் தொற்று நோய்க்கு மத்தியில் மீண்டும் இன்று இவை திறக்கப்பட்டுள்ளன.