ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கப்படுவதற்கு அதில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட 5 நாடுகளில் 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும் சீனா இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
மாறி வரும் உலக அரசியல் சூழலுக்கு ஏற்ப ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகளை அதிகமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெற இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜேர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 4 உறுப்பினர் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்குச் சீனா தொடர்ந்து எதிராக உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தற்போது 5 நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகள் உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டுள்ளன. தற்காலிக உறுப்புரிமை கொண்ட நாடுகள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தோ்தெடுக்கப்படுகின்றன.
பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ள ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐ.நா.வில் கொண்டுவரப்படும் எந்தவொரு தீா்மானத்தையும் வீட்டோ எனப்படும் ஒரு அமைப்பு அல்லது சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்யும் அதிகாரித்தைக் கொண்டுள்ளன.
இவ்வாறான நிலையில் சில நாடுகள் தங்களது சுய நலன்களுக்காக வீட்டோ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. எதிர்காலங்களிலும் பயன்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இவ்வாறான நிலையில் சமகால உலக யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு ஐ.நா. பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.