உலகில் எந்தவொரு நாட்டுடனும் போர் செய்யும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.
எனினும் சில நாடுகள் மோதல்களைத் தூண்ட முற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவா், இவ்வாறான செயல் வரலாற்றின் போக்குக்கு எதிரானது எனக் குற்றஞ்சாட்டினார்.
ஐ.நா. பொதுச் சபையின் 75 ஆவது ஆண்டு கூட்டத்தொடரில் இடம்பெற்ற பொது விவாதத்தில் நேற்று இணைய நேரலை வழியில் பேசும்போதே ஜி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுநோயின் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உரிய திட்டங்களை உலகம் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சீனா ஒரு புதிய வகை, சிறந்த மற்றும் சீரான உலகமயமாக்கல் கொள்கையை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான திட்டங்களுக்கு சீனா தனது பங்களிப்பைச் செய்யும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
கோவிட்-19 உலகத்தை நாசமாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜி, இந்நிலையில் உலக மக்களின் நலனை முன்னிறுத்தி உலக நாடுகள் ஒன்றுமையைப் பேண வேண்டும் என்றார்.
நாங்கள் அனைவருமே ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத உலகளாவிய கிராமத்தில் வாழ்கிறோம் என்பதை கோவிட்-19 எமக்கு நினைவூட்டுகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் வேறுபாடுகளைக் களைந்து ஒரே பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களாக ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும். மாறான மோதல்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
எந்தெவொரு நாட்டினதும் சுயாதீனத்திலும் தலையீடு செய்யக்கூடாது. அவர்களின் தனித்தன்மையை மதிக்க வேண்டும்.
எந்தவொரு நாடும் மற்றவர்களின் கஷ்டங்களிலிருந்து பயனடையவோ அல்லது மற்றவர்களின் கஷ்டங்களை சாதகமாக்கி தமது ஸ்திரத்தன்மையை பேணவோ முடியாது என்று ஜி கூறினார்.
உலகளாவிய தொற்றுநோயை அரசியல்மயமாக்கி எந்தவொரு நாட்டையும் களங்கப்படுத்தும் முயற்சியும் நிராகரிக்கப்பட வேண்டும்.
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் வளர்ந்துவரும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் குறித்து உலகம் அக்கறை காட்ட வேண்டும் எனவும் ஜி.ஜன்பிங் கேட்டுக்கொண்டார்.