கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 20-ஆம் திகதி வரையான ஒரு வாரத்தில் மட்டும் 20 இலட்சம் புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உலகெங்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா இறப்புக்கள் ஒப்பீட்டளவில் உலகெங்கும் குறைந்துள்ளபோதும் தொற்று நோயாளர் தொகை ஆபத்தான வகையில் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 20-ஆம் திகதியுடன் முடிவடைந்த 7 நாட்களில் உலகெங்கிலும் 19 இலட்சத்து 98 ஆயிரத்து 897 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது அதற்று முந்தைய வாரத்தை விட 6 வீதம் அதிகரிப்பை கொண்டுள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளர்கள் செப்டம்பர் 20 வரையான ஒரு வார காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக ஐ.நா. சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பதிவான 20 இலட்சம் தொற்று நோயாளர்களில் 38 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
கொரோனா மரணங்கள் ஒப்பீட்டளவில் உலகெங்கும் குறைந்துள்ள போதும் ஐரோப்பிய நாடுகளில் இறப்பு வீதம் அதிகரித்து வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் ஐரோப்பாவில் மரணங்கள் 27 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன