கொரோனா வைரஸ் தொற்று நோயை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்காவும் சீனாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுவரும் நிலையில் இது இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய பனிப்போராக உருவெடுக்கலாம் என்ற அச்சம் உருவாகி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்குக் குறித்து தனது உரையில் கவலையை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குடெரெஸ், புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொற்று நோய் நெருக்கடியின் மத்தியில் ஐ.நாவின் 75-ஆம் ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் இணைய வழியே நடைபெற்று வருகிறது.
பொதுச்சபை கூட்டத்தில் பொது விவாதங்களில் போது அமெரிக்காவும் சீனாவும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன.
உலகையே முடக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சீனாவை பொறுப்பாளியாக்கவேண்டுமென ஐ.நா. சபையில் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலின் தொடக்கத்தில் உள்நாட்டில் போக்குவரத்தை முடக்கிய சீனா, சர்வதேச விமானங்களை அனுமதித்து வைரஸ் பரவலுக்கு வழிவகுத்து விட்டது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று பொதுச் சபை விவாதத்தில் பேசிய சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் உரை அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஐ.நா. வரை ட்ரம்ப் தமது அரசியல் வைரஸை பரப்புவதாக சாடிய ஜி ஜின்பிங், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளுடன் இணைந்து சீனா செயற்படுவதாக விளக்கமளித்தார்.
மேலும், உலக நடப்புகளில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும், பிற நாடுகளை கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்றும் அமெரிக்காவை ஜின்பிங் மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில் அமெரிக்கா-சீனா இடையிலான வார்த்தைப் போர் புதிய பனிப்போருக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
அண்மைக் காலமாக வர்த்தகம், தொழிற்நுட்பம் ரீதியாக சீனாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. தாய்வான், ஹொங்கொங் உள்ளிட்ட விவகாரங்களிலும் சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்காவின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் புதிய பனிப் போர் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.