2020-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை ரைம்ஸ் பத்திரிகை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களாக உள்ளவர்களின் பட்டிலை வெளியிட்டு வருகிறது.
இன்று வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், அமெரிக்க தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், ஜேர்மன் சாஞ்சலர் அங்கேலா மேர்க்கெல், அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி ஃபாசி, நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
செல்வாக்கு மிக்க உலகத் தலைவர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இடம்பெற்றுள்ளார். கலைஞர்கள் பிரிவில் பொலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார்.
மேலும் டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெண்களில் ஒருவரான 82 வயது போராட்டக்காரர் பில்கிஸ், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் லண்டனைச் சேர்ந்த எச்.ஐ.வி.நோயாளியை குணப்படுத்திய பேராசிரியர் ரவீந்திர குப்தா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.