கிளிநொச்சியில் ஆபத்து மிகுந்த விபத்து சம்பவம் ஒன்று இன்று பகல் பதிவாகியுள்ளது.வில்லுத்தகடு உடைந்ததில் ரிப்பர் வாகனம் வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதியதில் பாரிய மரமொன்று முறிந்தது. தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு கல்லுடன் பயணித்த ரிப்பர் வாகனத்தின் வில்லுத்தகடு உடைந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது குறித்த ரிப்பர் வாகனம் பயணித்த திசையைவிட்டு வீதியின் மற்றைய திசைக்கு சென்று மரமொன்றுடன் மோதியது. இதன்போது மரம் முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பகல் 12.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தின்போது எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாடசாலை மாணவர்கள் பேருந்துக்காகவும், பெற்றோருக்காகவும் காத்திருக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் சந்தர்ப்பங்களில் கனரக வாகனங்களின் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இரணைமடு சந்திமுதல் கரடிபோக்கு சந்திவரை ஏ9 வீதியை அண்மித்து 3 பிரதான பாடசாலைகள் காணப்படுகின்றன. அப்பாடசாலைகளிற்கு மாணவர் தொகை அதிகம் என்பதாலும், குறித்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன் கனரக வாகனங்களின் பயணங்களும் அதிகமாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி