நுண்நிதிக் கடன் பாதிப்பில் இருந்து பெண்கள் மீண்டெழுவதற்கான தொழில் சார் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று (24-09-2020) பகல் பெண்களுக்கான தொழில் சார் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,
பெண்களின் முயற்சியும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாக உள்ளது. அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஆண் பெண் இருபாலாரும் இணைந்து செயற்படுவதனால் தான் அபிவிருத்தியை அடையமுடியும்.
அத்தோடு வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்கு அது வழிவகுக்கும். எமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சனத்தொகை வீதத்தில் அதிகளவானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர்.
நாட்டில் பெண்களும் அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்ற அடிப்படையில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில் தவிர்க்க முடியாத இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பல்வேறு விதத்திலும் இவ்வாறான பெண்கள் போராடி பிரச்சனைகளுக்குள் சென்றிருப்பதை நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக, நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகமாக உள்ளனர் இவர்களை எல்லாம் மீளக்கொண்டு வருவதற்கு இவ்வாறான தொழில்சார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இவ்வாறான பயிற்சிகள் முக்கியமானதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிதியுதவியுடன் U.N WOMEN, chrysalis ஆகிய நிறுவனங்கள் உள்ளிட்ட 05 அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட தொழில் சார் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், உற்பத்தி பொருட்களும் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர், வடமாகாண ஆளுநரின் செயலாளர், பிரதி பிரதமசெயலாளர் மற்றும் மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள், பிராந்தியப்பணிப்பாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி