ஒன்ராறியோவில் அத்தியாவசியமற்ற வணிக நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடிய இடங்களுக்கு உடனடி கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சுகாதார-பாதுகாப்பு அதிகாரிகள் மாகாண அரசுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
38 சுகாதார - பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சார்பாக ஒன்ராறியோ மருத்துவமனைகள் சங்கம் நேற்று வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜிம்கள், உணவகங்கள் மது விடுதிகள், இரவு விடுதிகள் மற்றும் திரையரங்குகள் போன்ற அத்தியாவசியமற்ற வணிக அமைப்புக்களுக்கு உடனடிக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் அதிகளவில் ஒன்றுகூடக்கூடிய இடங்களிலும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற வணிக அமைப்புக்களைச் சோ்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு மாகாண அரசு வலியுறுத்த வேண்டும். மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்துமாறும் மாகாண அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த ஏழு நாட்களாக தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரியாக 400 என்ற அடிப்படையில் பதிவாகி வருகிறது.
உடனடியாகச் செயற்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்பாடு இல்லாத நிலையில் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதியர் இல்லங்கள் மற்றும் பிற அமைப்புகளில் இந்தத் தொற்று நோய் வேகமாக பரவுகிறது என்பதை சர்வதேச அனுபவத்திலிருந்து நாங்கள் அறிந்கொண்டுள்ளோம் என ஒன்ராறியோ மருத்துவமனைகள் சங்கத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தயங்குவதற்கான நேரம் அல்ல. எங்கள் மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வேகமாகச் செயற்படுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா