தென்னிந்தியாவின் பிரபல திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உயிர் பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி எஸ்.பி.பி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகுந்த ஆபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்போதே அவர் உயிரிழந்துவிட்டதாக வதந்திகளும் வெளியாகியிருந்தன.
இருந்தபோதிலும் அவரை விசேட மருத்துவர்களின் துணையுடன் போராடி மீட்டெடுத்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் நாளாந்தம் அறிக்கை வெளியிட்டுவந்திருந்தது.
அதன் பின்னர் அவர் முழுமையான குணமடைந்து உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு தேறியுள்ளதாக மகன் எஸ்.பி.பி.சரண் காணொளிகள் ஊடாக அறிவித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரவு வைத்தியசாலை நிர்வாகம் கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எக்மோ மற்றும் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தது.
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் எம்.ஜி.எம். மருத்துவா்கள் அவரது உடல் நிலையைத் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர் எனவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டது.
சம்பவத்தை அடுத்து பிரபல நடிகர் கமல் வைத்தியசாலைக்கு சென்று எஸ்.பி.பியின் மகன் சரணுடன் உரையாடிவிட்டு திரும்பியபோது, “எஸ்.பி.பி நலமாக உள்ளார் என்று சொல்லமுடியாது” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல எஸ்.பி.பியின் குடும்ப உறவுகளும் வைத்தியசாலைக்கு சென்று திரும்பியிருக்கின்றனர். கடந்த இரவு தொடக்கம் தொடராக செய்தியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தில் திரண்டு காணப்பட்டுவருகின்றனர். இதேவேளை இன்று முற்பகல் வைத்தியசாலைச் சூழலில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சற்று முன்னர் எஸ்.பி.பி மறைந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த இரவே அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.