தென்னிந்திய திரை இசைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எம்.ஜி.எம் வைத்தியசாலை வளாகம் பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரவு முதல் அந்தப் பகுதியில் செய்தியாளர்கள் திரண்டுள்ள நிலையில் இன்று முற்பகல் பொலிஸாரின் ஆயுதப் பிரிவினர், போக்குவரத்துப் பொலிஸார் உட்பட்ட நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த இரவு பிரபல நடிகர் கமலஹாசன் வைத்தியசாலைக்கு சென்று திரும்பியிருந்த நிலையில்,
சற்று முன்னர் எஸ்.பி.பியின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரி ஆகியோரும் பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.
அதன் பின்னர ஊடகவியலாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா கதைக்கமுடியாது தழுதழுத்தகுரலில் பேசினார்.
“சில சூழ்நிலைகளில் வார்த்தை வராது, துக்கம், வருத்தத்தில் பேச்சு வராது, அவன் என் நண்பன் இன்னும் நம்பிக்கை உள்ளது, எஸ்.பி.பி. எழுந்து வருவார் என நம்புகிறோம் ” என்றார்.
இன்று காலை முதல் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகும் என்று தொடர்ந்தும் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளிவரும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி - காணொளி - புதிய தலைமுறை