"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசமைப்புக்கான 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால், அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும். அதேவேளை நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தைப் பெரிதும் வலுவிழக்கச் செய்யும்."
- இவ்வாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
அதுமாத்திரமன்றி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய விதமாக அரசு செயற்பட்டுவரும் நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் இலங்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது கூட்டத் தொடரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப்பினால் இலங்கை தொடர்பான விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய அமையம் உள்ளிட்ட 5 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
"மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தமைக்காக ஐ.நா. விசேட அறிக்கையாளருக்கு நன்றி கூறுகின்றோம். அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களுடன் தொடர்புபட்ட வகையில், அண்மைக்காலமாக இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் நிலைவரம் தொடர்பில் சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்" என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.