அமெரிக்காவில் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்குச் செல்வோர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாக்களுக்குக்கான உச்சபட்ச கால எல்லையை நிர்ணயிக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயிலும் சீன ஆராய்ச்சி மாணவர்கள் 1000 பேரின் விசாவை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் இரத்து செய்தது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இரகசிய தகவல்கள் திருடப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், விசா திட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கவும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டும் வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள், பத்திரிகையாளர்களுக்கான விசாக்களுக்கு அதிகபட்ச கால எல்லையை நிர்ணயிக்கும் தீா்மானத்தை அமெரிக்கா எடுத்துள்ளது.
புதிய விதிமுறையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளின் பிரகாரம் மாணவர் விசா ஆராய்ச்சி மாணவர் விசாவில் தங்கி இருப்பவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுக்கு மேல் அமெரிக்காவில் இருக்கக் கூடாது.
நிர்ணயிக்கப்பட்ட விசாவை எண்ணிக்கையை விட அதிகளவு மாணவர்கள் தங்கியிருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே விசா வழங்கப்படும்.
அதன்பின், இந்த மாணவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், முறையாக விண்ணப்பித்து கால அளவை 4 ஆண்டு வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு பத்திரிகையாளர் விசாவில் திட்டமிடப்பட்ட பணிகளை முடிக்க அதிகபட்சம் 240 நாட்கள் மட்டுமே விசா வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 240 நாட்கள் விசா நீட்டிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள விதிமுறைப்படி மேற்குறிப்பிட்ட வகை விசாக்களைப் பெற்று அமெரிக்கா வந்துள்ள பலர் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக தங்கி உள்ளனர். இதன் காரணமாகே, இந்த அதிரடி நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.