"அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்குவார்கள். ஆதரவு வழங்குவதால் அவர்களை அரசில் ஒருபோதும் இணைத்துக்கொள்ளமாட்டோம். 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிக் கொள்வதற்கான பெரும்பான்மைப் பலம் ஆளும் தரப்பினரிடம் உள்ளது."
- இவ்வாறு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
" இல்லாத காரணிகளைக் குறிப்பிட்டுக்கொண்டு எதிர்த்தரப்பினர் அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கிறார்கள். நல்லாட்சி அரசில் நாடாளுமன்ற ஜனநாயகம், ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை எனக் குறிப்பிட்டுக் கொண்டு அரசு மறைமுக அரசியல் பழிவாங்கலை நோக்கமாகக்கொண்டு அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட குறைபாடுகளையும் அப்போது சுட்டிக்காட்டினோம். 19ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த 20ஆவது திருத்தத்தை ஒரு வார காலத்துக்குள் கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசில் ஜனாதிபதி பதவி வகித்தபோது நாடாளுமன்றத்துக்கு வந்து எதிர்த்தரப்பின் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் வாக்குறுதி வழங்கினார்.
20ஆவது திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வாரத்துக்குள் அல்ல 5 வருடகாலப் பதவிக் காலத்தில் நிறைவேற்றவில்லை.
ராஜபக்சக்களை இலக்குவைத்துக் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் நல்லாட்சிக்குச் சாபக்கேடாக அமைந்தது என்பதை மைத்திரிபாலவே ஏற்றுக்கொண்டார்.
கடந்த அரசில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் அதிகார முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவை நாட்டு மக்களே இறுதியில் அனுபவித்தார்கள்" - என்றார்.