பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று நோய் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி தற்போதைய போக்கில் தொடர்ந்து அதிகரிக்குமானால் நாட்டின் சுகாதார சேவை விரைவில் முற்றாக செயலிழக்கும் அபாயம் உள்ளதாக வைத்தியர்களின் ஆணையகத்தின் தேசிய பேவைத் தலைவர் பட்ரிக் பூட் எச்சரித்துள்ளார்.
நாங்கள் நினைத்ததை விட தொற்று நோயின் இரண்டாவது அலை மிக வேகமாக, ஆபத்தானதாக மாறி வருகிறது என டு டிமாஞ்சே என்ற வாரப் பத்திரிகைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய செவ்வியில் பட்ரிக் பூட் தெரிவித்தார்.
மார்சேய் மற்றும் பாரிஸ் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் தொற்று நோய் மிக மோசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் இந்த வாரம் அறிவித்த கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகள் அதிகரித்துவரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என பட்ரிக் பூட் தெரிவித்தார்.
இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு இதே நிலை தொடருமானால் இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பிரான்ஸ் முழுவதும் தொற்றுநோய் மிகத் தீவிரமாகும்.
இவ்வாறு நாடு முழுவதும் தொற்று நோய் அதிகரித்தால் மருத்துவ சேவைகள் முற்றாக முடங்கும். நோயாளர்களைப் பராமரிக்க மருத்துவா்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனவும் நாட்டின் சிரேஸ்ட சுகாதார அதிகாரி பட்ரிக் பூட் எச்சரித்தார்.
பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 11,123 புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன. நேற்று 27 போ் உயிரிழந்தனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் நாட்டில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 538,569 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்குப் பலியானவா்களின் தொகை 31,727 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் மருத்துவமனைகளில் தற்போது 4,204 பேர் உள்ளனர் . இதில் 786 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
நாட்டில் இடம்பெற்றுவரும் கோரோனா சோதனையில் தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் வீதம் தற்போது 7.4% ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.