1600 விமானிகள் உட்பட 32,000 விமான சேவை நிறுவன ஊழியர்களை கட்டாய பணி இடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.
32,000 பணியாளர்களை பணி இடை நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியன அறிவித்துள்ளன.
கொரோனா தொற்று நோயால் விமான சேவைகள் முடங்கியுள்ளதால் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க முடியாமல் உலகெங்கும் விமான சேவை நிறுவனங்கள் திண்டாடி வருகின்றன.
அமெரிக்காவில் வேலையிழப்புக்களைத் தவிர்க்கும் நோக்கில் விமான நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய மானியங்களும் தீா்ந்துவிட்ட நிலையில் ஊழியா்களை பணி இடை நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இனியும் அமெரிக்க அரசின் மானிய உதவு தொகை கிடைக்கும் நம்பிக்கை இல்லாத நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்டாய பணி இடை நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் நிலைமை சீரானால் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 13% பணியாளர்கள் இதன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் கொடுக்க மேலும் 25 பில்லியன் டொலர்கள் தொகையை யு.எஸ். ஏர்லைன்ஸ் நிறுவனம் அமெரிக்க அரசிடமிருந்து கோரியது.
எனினும் அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சுமார் 1600 விமானிகள் 19,000 ஊழியர்களை பணி இடை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 13,000 பேரும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.