அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களிடையே இடம்பெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் தானே வென்றதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிடன் மிகவும் பலவீனமானவர், அவர் புலம்பல்வாதி. அவரின் அபாயகரமான திட்டத்தை நான் வெளியே கொண்டு வந்துவிட்டேன் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி சார்பில் அடுத்த தோ்தலில் போட்டியிடுபவருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோருக்கு இடையிலான முதல் நேரடி விவாதம் நேற்று நடைபெற்றது.
இருவரும் ஒருவா் மீது ஒருவா் கடும் குற்றச்சாட்டக்களை முன்வைத்த நிலையில் இந்த விவாதம் கூச்சலும் குழப்பமுமாகவே முடிந்தது.
தோ்தலுக்கு முன்பு ஜனாதிபதித் தோ்தல் வேட்பாளர்கள் மொத்தம் மூன்று முறை விவாதத்தில் ஈடுபட வேண்டும். முதல் விவாதம் ஓஹியோ, கிளீவ்லேண்டில் நேற்று நடைபெற்றது. இதில் நிறவெறி, பொருளாதாரம், காலநிலை மாற்றம், கொரோனா, சுகாதாரம் போன்ற விடயங்களை முன்னிறுத்தி இரு வேட்பாளர்களும் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவாதத்தில் ஊழல் நிரம்பிய ஊடகங்கள் செய்ய மறுத்ததை நான் செய்தேன். ஜோ பிடனின் 47 ஆண்டுகால பொய்களுக்கு அவரைப் பொறுப்பேற்கச் செய்தேன். 47 ஆண்டுகளின் துரோகம் தோல்வியை ஒப்புக் கொள்ளச் செய்தேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வேலைகளை பிடன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார். உங்கள் கனவுகளையும் ஏற்றுமதி செய்தார். பிடன் இந்த நாட்டை ஆள தகுதி இல்லாதவர், மிகவும் பலவீனமானவர். அவர் என்னிடம் மோசமாகத் தோற்றுப் போய்விட்டார்.
மீதி விவாதங்களை இரத்து செய்யுமாறு அவரது ஆதரவாளர்கள் கூறுமளவுக்கு அவா் தோல்வியடைந்துள்ளார் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, முதல் விவாதம் கூச்சலும் குழப்பங்களுடன் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள இரண்டு விவாதங்களிலும் ஒழுங்கு முறை கடைப்பிடிக்கப்படுவதற்கான புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விவாதங்களுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிடன் பேசும்போது அவரைப் பேசவிடாமல் இடையூறு செய்ததைத் தவிர ட்ரம்ப் எதையும் செய்து விடவில்லை என்பதே அங்கு விமர்சனமாக உள்ளது.
பொக்ஸ் செய்தி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ் வாலஸ் பல முறை ட்ரம்பிடம் கெஞ்சினார். தயவு செய்து பிடனை முடிக்க விடுங்கள் என்றார். ஆனால் ட்ரம்ப் அதனைக் கேட்கவில்லை.
இந்நிலையிலேயே அடுத்த விவாதத்தின்போது ஒழுங்கு முறைகளை அமுல் செய்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.