தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஒரு சிலரின் சொந்த நலன்களுக்கு அமைவாக இழுத்துச் செல்வதற்கு நான் உன்படாமையே நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என்று தமிழ்த் தேசிய முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தர் வீ.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் அவருடைய அலுவலக்தில் நடைபெறுகின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரையும் உள்வாங்கி மக்களுடைய கட்சியாக இதனை வைத்திருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு, ஆனால் ஒரு சிலரின் சுயலாப நோக்கிற்காவே தான் வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியபோது, சம்பந்தன் அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தன் அவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றார், ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுக்கிறார் இல்லை என்று தெரிவித்திருந்தோம்.
அதன் பின்னர் இந்தக் கட்சி ஜனநாயக பண்பியல்புடன் செயற்படும் என்று நினைத்திருந்தோம் ஆனால் ஒரு சிலரின் எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே கட்சி செயற்படவேண்டும் என்று அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல கட்சியின் நிதி நடவடிக்கை தொடர்பில் காலா காலமாக தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இதனால் நிதி நடவடிக்கைகளை சரியாக கைக்கொண்டு அவப் பெயரை நீக்குவதற்காக நிதிப் பிரிவு ஒன்றை உருவாக்க முயன்றேன். அதனையும் தனிப்பட்ட ஒரு சிலரின் விருப்புக்காக முன்னெடுக்க அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல கட்சிக்கு கூடுதலாக ஆட்களை இணைக்கவேண்டாம் என்றும், தாத்தா (ஜி.ஜி.பொன்பலம்), தந்தை (குமார் பொன்னம்லம்) ஆகியோருக்கு நேர்ந்தவையே எனக்கும் நேரும் என்ற அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்தியதாகவும் மணிவண்ணன் தெரிவித்தார்.
அதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் இருந்து ஒதுங்குவதற்காக நான் முனைந்தபோது, தேர்தலில் என்னை நிற்குமாறு கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் மன்றாட்டாக கேட்டார்கள், நண்பர்கள் ஊடாக கெஞ்சினா்ரகள், சம்பந்தன் ஐயா, விக்னேஸ்வரன் ஐயா ஆகியோரை கொள்கை தொடர்பில் விமர்சித்தவர்கள், கொள்கை இல்லாதவன் என்று சொல்கின்ற மணிவண்ணனாகிய என்னிடம் எதற்காக கெஞ்சினார்கள் என்று மணிவண்ணன் தெரிவித்தார்.