இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 127 மருத்துவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவர் சங்கத்தின் பேச்சாளர் ஹலிக் மாலிக் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவா்களில் 65 பொது சுகாதார மருத்துவர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களும் அடங்குவதாகவும் அவா் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் முன்னணியில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு இந்தக் குழுவை அமைத்துள்ளதாக மலேசிய மருத்துவா் சங்கத்தின் தலைவர் டாயேங் எம். ஃபக்கி தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை பாதுகாக்கும் வழிகளை இந்தக் குழு கண்டறியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்புப் பணிக்குழு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் சேர்ந்து தமது அமைப்பு தனிநபர் பாதுகாப்பு சாதனங்களையும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை களையும் வழங்கி வருவதாகக் கூறிய டாயேங் எம். ஃபக்கி, மருத்துவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களில் மூலக் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய போதுமான இடங்கள் இல்லாததால் இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பை ஜகார்த்தா நிர்வாகத்தினர் தயார்ப் படுத்தி வருகின்றனர்.
ஜகார்த்தாவுக்கு வடக்கே அமையும் இடுகாட்டுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்