"வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சர்வதேச சிறுவர் தினம் எமக்குக் கரிநாளே."
- இவ்வாறு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"பத்து வருடஙக்ளுக்கு முன்பு போரின்போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே? சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களைக் காணாமல் ஆக்கியுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசுக்கு என்ன செய்தார்கள்?
இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே இந்தச் சர்வதேச சிறுவர் தினத்தை கரிநாளாகப் பிரகடப்படுத்தியுள்ளோம்.
இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் நீதி கோரி மகஜர் ஒன்றை மின்னஞ்சல் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இன்று அனுப்பிவைத்துள்ளோம்" - என்றார்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.