கனடாவில் இரண்டு பெரிய சனத்தொகை அடர்த்திமிக்க மாகாணங்களான கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் நேற்று கிட்டத்தட்ட 2000 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
கி்யூபெக்கில் நேற்று 1,364 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இது மாகாணத்தின் ஒற்றை நாள் அதிகரிப்பாகப் பதிவாகியுள்ளது. புதிய தொற்று நோயாளர்களுடன் அங்கு பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 81,014-ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் நேற்று மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மாகாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,899 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் கியூபெக் மக்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீடுகளிலேயே இருக்க வேண்டும் என மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று 548 புதிய தொற்று நோயாளர்கள் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் இதுவரை 55,362 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் 7 புதிய கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின. இவற்றுடன் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,987 ஆகப் பதிவாகியுள்ளது.
ஒன்ராறியோவில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளர்களில் அதிகளவாக 201 தொற்று நோயாளர்கள் ரொரண்டோவில் இனங்காணப்பட்டனர். அத்துடன் பீல் பிராந்தியம்- 90, ஒட்டாவா - 62 யோர்க் பிராந்தியத்தில் 56 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா