ரொரண்டோ – ஸ்கார்பாரோ பகுதி, 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள நிலத்தில் தமிழ் சமூக மையம் அமைவதற்கான பரிந்துரையை ரொரண்டோ நகர சபையின் உப குழு ஏற்றுள்ளது.
கடந்த 5 –ஆம் திகதி திங்கட்கிழமை ரொரண்டோ நகரசபை உபகுழு இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ளதாக தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு தெரிவித்தது.
ரொரண்டோ நகர சபை உபகுழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பரிந்துரை, ரொரண்டொ நகர சபையினால் இம்மாதம் 27-ஆம் திகதி அங்கீகாரத்துக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலத்தை மிகக்குறைந்த குத்தகைக் கட்டணத்தில் பெற்றுகொள்வதற்காக ரொரண்டோ நகரசபையுடனும், நகரசபை முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வி உடனும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும் கடந்த ஒருவருட காலமாக கனடா தமிழ்ச் சமூக மைய முன்னெடுப்புக் குழு நெருக்கமாகச் செயற்பட்டு வந்தது.
தமிழ் சமூக மையத்துக்கான இடத்தை இனங்காண்பதற்காக நகர சபையானது முழுத் தமிழ் சமூகத்துடனும் இணைந்து செயற்பட்டது என்று ரொரண்டோ நகரசபை முதல்வர் ஜோன் டோரி (John Tory) தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் சமூக மையத்தை அமைக்கும் கனவை
நனவாக்கும் முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று உங்களுடன் இணைந்து செயற்பட நான் ஆவலாக உள்ளேன் என்று நகரசபை உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி குறிப்பிட்டுள்ளார்.
311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள இந்த உபரி நிலமானது ரொரண்டோ நகரசபையினால் ஒரு சமூக மையத்தின் கட்டுமானத்துக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆதனமாகும். இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் ரொரண்டோ, மார்க்கம், டுறம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.