கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடி காரணமாக அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 150 மில்லியன் போ் மிக மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையை எதிர்கொள்ள நேரிடும் என மதிப்பிடப்படுவதாகவும் உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் 1.4 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையால் பாதிக்கப்படக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அதிக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மேலும் பல இலட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
நடுத்தர வருவாய் கொண்ட பல நாடுகளில் கணிசமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் அபாயம் உள்ளது.
மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோரில் 82 சதவீதம் பேர், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.