ஒன்ராறியோவில் நேற்று வியாழக்கிழமை 797 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மாகாணத்தில் தொடர்ந்து அதிகரிப்பு தொடரலாம் என சுகாதார வல்லுநா்கள் எச்சரித்துள்ளனர்.
தொற்று நோய் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகளவு ஒரு நாள் தொற்று நோயாளர் தொகை இதுவாகும். நேற்று முன்தினம் 732 தொற்று நோயாளர்கள் பதிவான நிலையில் நேற்று மற்றொரு புதிய சாதனை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
புதிய சாதனை தொற்று நோயாளர் தொகையுடன் ஒன்ராறியோவில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 56,742 ஆக உயர்ந்துள்ளது. இதில் 48,308 போ் குணமடைந்துள்ளனர். அத்துடன் மாகாணத்தில் கொரோனா மரணங்களும் 2,992 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 48,500 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. இதுவரை மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிக சோதனை இதுவாகும்.
மாகாணத்தின் தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி புதிய தொற்றுநோயாளர்களில் 57 சதவீதம் போ் 40 வயதிற்குட்பட்டவர்களாவா்.
மேலும் 225 தொற்று நோயாளர்கள் 40 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். 90 பேர் 60 முதல் 79 வயதிற்குட்பட்டவர்களாவர். 80 வயதுக்கு மேற்பட்ட 22 போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 206 பேர் ஒன்ராறியோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவா்களில் 47 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 29 பேர் வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசிக்கின்றனர்.
நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களில் 265 போ் ரொராண்டோ,, ஒட்டாவாவில் - 182, பீல் பிராந்தியத்தில் -134, யோர்க் பிராந்தியத்தில் 78 போ் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற ஆறு உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளில் 10 க்கும் மேற்பட்ட தொற்று நோயாளா்கள் பதிவாகியுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா