பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகள் நேற்று வியாழக்கிழமை முதல் அவசரகால நிலைக்கு நகர்ந்ததுள்ளன. இதன்மூலம் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துசெய்யப்படுவதுடன், அத்தியாவசியமற்ற சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
பாரிசில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் தொகை அதிகரித்து வருவதுடன், அனைத்து வைத்தியசாலைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் பாதிக்கும் மேல் நிறைந்துள்ளமை அடுத்து அவசர நிலைக்கு மாறும் தீா்மானம் எடுக்கப்பட்டது.
பிரான்ஸில் நேற்று வியாழக்கிழமை 18,129 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் அறிவித்தார்.
அத்துடன் இதுவரை இல்லாத சாதனை அதிகரிப்பாக புதன்கிழமை கிட்டத்தட்ட 19,000 தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
தினசரி தொற்று நோயாளர் தொகை 18 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் தொற்று நோயின் உச்சத்தில் காணப்பட்ட அவரச சிகிச்சைப் பிரிவு நோயாளர்கள் அளவை ஒத்ததாக நிலைமை தீவிரமடைந்துள்ளது.
அவசர சிகிச்சை மற்றும் வழக்கமான மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியுள்ளதால் சுகாதார சேவைகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அனைத்து வளங்களையும் ஒருங்கிணைக்க ஏதுவாகவும் நோயாளர் அதிகரிப்பை எதிர்கொள்ள ஏற்றவாறும் அவசர திட்டத்தை செயல்படுத்துமாறு பிராந்தியத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்களை கேட்டுள்ளதாக பாரிஸ் பிராந்திய சுகாதார இயக்குனர் அரேலியன் ரூசோ தெரிவித்துள்ளார்.
எழுச்சி பெறும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஏதுவாக இயல்பான ஒன்றுகூடல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை தெரிவித்தார். எனினும் மீண்டும் ஒரு சமூக முடக்கலை விதிக்கும் திட்டம் தற்போதுவரை இல்லை எனவும் அவா் கூறினார்.
எனினும் தொற்று நோய் பரவலைக் கட்டப்படுத்தும் வகையில் அதி அபாயப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சு நகரங்களான லியோன் (Lyon, லில்லி (Lille), கிரெனோபில் மற்றும் செயிண்ட்-எட்டியென் (Grenoble and Saint-Étienne) ஆகியன நாளை சனிக்கிழமை முதல் அதி ஆபத்து வலயங்களாக பிரகடணப்படுத்தப்படுவதாக என பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாரிஸ் மற்றும் மார்சேய் நகரங்கள் ஏற்கனவே தொற்று நோய் அதி ஆபத்து வலயங்களான அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு