தென்கொரியாவின் தென்கிழக்கு அல்சான் துறைமுகப் பகுதியில் உள்ள 33 மாடிக் கட்டடத்தில் நேற்றிவு 11 மணியளவில் ஏற்பட்ட தீ இன்றும் தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. இந்தத் தீ விபத்தில் சிக்கிய 12-க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 91 பேர் தீவிபத்துடன் தொடா்புடைய சிறிய காயங்கள் மற்றும் அதிக புகையை சுவாசித்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
எனினும் இந்தத் தீவிபத்தில் இதுவரை எந்தவொரு உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை.
இரவு 11.30 மணியளவில் பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் வேகமாக பரவியது.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 930 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கியபோதும் கடும் காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் இன்று வெள்ளிக்கிழமை காலை வரை மேல் தளங்களில் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அவற்றைக் கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
200 தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா? எனக் கண்டறிய தேடுதல் பணியில் இறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தென்கொரிய பிரதமர் சங்-சி-கியுன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீ விபத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் துரிதமாக செயல்பட்டு தடுத்த அல்சான் பகுதி தீயணைப்புத்துறைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதவகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.