ஒன்ராறியோவில் வெள்ளிக்கிழமை 939 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதுடன், மேலும் 5 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர்.
இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தொற்று நோயாளர் தொகை மற்றொரு சாதனை மட்டத்துக்கு நேற்று அதிகரித்துள்ளது
இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்று நோயாளர் தொகை விரைவில் மருத்துவமனைகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அறுவைச் சிகிச்சைகளை நிறுத்த வேண்டிய அச்சுறுத்தல் இதனால் ஏற்படும் என ரொரண்டோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறை பீடாதிபதி டாக்டர் அடால்ஸ்டீன் பிரவுன் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார். “
தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பதால் ரொராண்டோ மற்றும் ஒட்டாவாவில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நிலை விரைவில் ஏற்படும் என்பதையே மாதிரிக் கணிப்பீடுகள் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை மாகாணத்தில் 44,900 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சோதனைகளின் நேர்மறை முடிவுகள் 2.1 என்ற வீதமாக இருந்ததாகவும் அவர் கூறினார். இதன்மூலம் மாகாணத்தில் பரிசோதனை நேர்மறை வீதம் முதல் முறையாக 2 வீதத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. இது சமூகத்தில் தொற்று அதிகரித்து வருவதைக் குறிக்கிறது எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, சில சமூகங்களில் சோதனைகளின் நேர்மறை 10 வீதத்துக்கு அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெரவித்தார்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட ஐந்து கொரோனா மரணங்களும் இரண்டு நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பதிவாகியுள்ளன.
புதிய இறப்புக்களுடன் கடந்த மார்ச் முதல் ஒன்ராறியோவில் பதிவான கொரோனா மரணங்கள் 2,997 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,681-ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் 49,032 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒன்ராறியோவின் 34 பொது சுகாதார பிரிவுகளில் 9 பிரிவுகளில் நேற்று புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகவில்லை. மேலும் 22 பிரிவுகளில் ஐந்து அல்லது அதற்கும் குறைவான தொற்று நோயாளர்களே பதிவாகினர்.
இந்த மாத தொடக்கத்தில் மாகாணத்தால் வெளியிடப்பட்ட மாதிரிக் கணிப்பீட்டில் ஒக்டோபர் நடுப்பகுதியில் மாகாணத்தில் தினசரி தொற்று நோயாளர் தொகை 1,000-க்கும் அதிகமாக உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவாகிவரும் தொற்று நோயாளர் தொகை இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா