அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுடையே கடந்த இரு வாரங்களாக நீடித்துவந்த கடும் சண்டையைத் தொடர்ந்து ரஷ்யாவின் தலையீட்டுடன் இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகல் முதல் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதன் உச்சமாக கடந்த இரு வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சுமார் 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
போர் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும், எதிர் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து தங்கள் தரப்பினரின் இறந்த உடல்களை மீட்கவும் இரு தரப்புக்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.