வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி மிகப் பெரும் இராணுவ அணிவகுப்பு ஒன்றை அந்நாடு நடத்தியுள்ளது.
வழக்கமாகப் பகலில் இவ்வாறான இராணுவ அணிவகுப்புக்கள் இடம்பெறுவதே வழமை என்றபோதும், இம்முறை இரவோடு-இரவாக இவ்வாறன பாரிய இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.
வழக்கமாக தனது எவுகணைகள் உள்ளிட்ட ஆயுத பலத்தை வெளிக்காட்டும் வகையிலேயே இத்தகைய இராணுவ அணிவகுப்புகளை வடகொரியா நடத்தும்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை நடந்த இந்த இராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
2018-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் இடையே நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பின்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தனது இராணுவ அணிவகுப்புக்களில் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் இவ்வாறான இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.
இரவில் ஏன் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது? என்பதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த இராணுவ அணிவகுப்பின் முடிவில் உரையாற்றிய கிம், வட கொரியாவில் யாருக்கும் வைரஸ் தொற்று உண்டாகாமல் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
எனினும் வட கொரியாவில் கொரோனா தொற்றாளர் ஒருவா் கூட இல்லை என்ற அந்நாட்டின் தகவல்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் வட கொரியா தீவிர தொற்று நோய் தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை, வட கொரியாவின் இந்த இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற படைத் தரப்பினரில் ஒருவர் கூட முக கவசங்களை அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.