கண்ணாடி, நாணயத் தாள்கள் மற்றும் உலோகப் பொருட்களில் மேற்பரப்புக்களில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
எனவே, இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க அடிக்கடி கைகளைக் கழுவுதல் மிகவும் அவசியம் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று நோயை ஏற்படுத்தும் SARS-COV-2 வைரஸ் 20 டிகிரி செல்சியஸில் (68 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் 28 நாட்கள் வரை உயிர் வாழ்வதைக் கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. ஆராய்ச்சியாளர்கள் இன்று திங்கட்கிழமை எச்சரித்துள்ளனர்.
திறன் கைப்பேசி தொடு திரைகள், மற்றும் நாணயத்தாள்கள் மற்றும் உலோகப் பொருட்களில் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழ்வது தமது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் (Influenza A) 17 நாட்கள் இவ்வாறான பொருட்களில் மேற்பரப்பில் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனர்.
20, 30 மற்றும் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வெப்ப நிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் உயிர் வாழும் காலம் குறைவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொருட்களில் மேற்பரப்புக்களில் வைரஸ் எவ்வளவு காலம் உண்மையில் இயங்கக்கூடியது என்பதை நிறுவுவது அதன் பரவலை இன்னும் துல்லியமாக கணிக்கவும் குறைக்கவும் உதவுகிறது. அத்துடன் மக்களைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்ய எங்களுக்கு உதவுகிறது என சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. தலைமை நிர்வாகி லாரி மார்ஷல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடல் திரவங்களில் உள்ள புரதங்கள் மற்றும் கொழுப்புகள் வைரஸ் உயிர்வாழும் நேரங்களை கூர்மையாக அதிகரிக்கும்.
இறைச்சி பதப்படுத்தும் வசதிகள் போன்ற குளிர்ச்சியான சூழல்களில் SARS-CoV-2 வைரஸ் அதிக காலம் நீடித்து வாழக்கூடிய சூழல் உள்ளமையை விளக்கவும் இந்த ஆய்வு உதவும். அத்துடன் இது குறித்து விழிப்புணர்வுடன் செயற்படவும் இது வழிவகுக்கும் என சி.எஸ்.ஐ.ஆர்.ஓவின் இயக்குனர் ட்ரெவர் ட்ரூ கூறினார்.
கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வளர்ச்சியடைந்த ஏனைய நாடுகளை விட அவுஸ்திரேலியா சிறப்பாகச் செயற்பட்டுள்ளது.
25 மில்லியன் மக்கள் தொகையில் மொத்தம் சுமார் 27,000 பேரே அங்கு இதுவரை தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 898 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டின் தொற்று மையமான விக்டோரியா மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை 15 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநில தலைநகர் மெல்போர்னில் கடுமையான முடக்கல் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீா்மானித்துள்ளது.
இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை ஆறு புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் ஐந்து போ் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டவா்களாவர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்