சீனாவின் கிங்டாவோ நகரில் உள்ள 90 இலட்சம் பேரையும் ஐந்து நாட்களில் முழுமையாக கொரோனா வைரஸ் சோதனைக்குட்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு சோதனைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டிலிருந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையுடன் தொடர்புடைய 12 புதிய தொற்று நோயாளா்கள் கிங்டாவோ நகரில் இனங்காணப்பட்டதை அடுத்தே நகரத்தில் உள்ள 90 இலட்சம் மக்களையும் முழுமையாகச் சோதனை செய்யத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தொற்று நோய் மையமான வுஹான் நகரத்தில் கடந்த மே மாதத்தில் ஒரு கோடியே 10 இலட்சம் மக்கள் 10 நாட்களில் முழுமையாகச் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
கொரோனா தொற்று நோயின் பிறப்பிடமான சீனாவில் தற்போது தொற்று பரவல் பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் உலகின் பல நாடுகள் இன்னமும் தொற்று நோயின் மோசமான பிடியில் அந்தரித்து வருகின்றன. பல நாடுகளில் கடுமையாக சமூக முடக்கல்கள் இன்னமும் அமுலில் உள்ளன.
இந்நிலையில் சீனாவில் கிங்டாவோ நகரில் ஆறு புதிய உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்கள் மற்றும் தொற்று நோய் அறிகுறிகளுடன் ஆறுபோ் கண்டறியப்பட்டுள்ளதாக கிங்டாவோ நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த அனைத்து தொற்று நோயாளர்களும் ஒரு மருத்துவமனையுடன் தொடர்புபட்டவா்கள் என சீன அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய கொத்தணித் தொற்று சிறியதாகத் தோன்றினாலும் நகரத்தில் உள்ள 90 மில்லியன் மக்களையும் முழுமையாகச் சோதிக்க சீன சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் குளோபல் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
நகரின் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் புதிதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் உட்பட சுமார் 114,862 பேர் ஏற்கனவே சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவா்கள் அனைவரும் எதிர்மறையாக முடிவுகளையே வெளிப்படுத்தியதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது. நாடு வைரஸின் மோசமான நிலையில் இருந்து பெரும்பாலும் மீண்டுள்ளது.
தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை சீனாவில் மொத்தமாக 85,578 போ் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டனர் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா