கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள ஏழு நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் பணியாளர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பைப் பெறும் யோசனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சா் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள எந்த மையங்களில் உதவிப் பணிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர்?என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எந்தப் பராமரிப்பு இல்லங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தினரை பணியில் ஈடுபடுத்துவது? என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாக ஒட்டாவா பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பராமரிப்பு மையங்களில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவ முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுவதாக ஒட்டாவா பொது சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கியூபெக் மாகாணத்தில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அங்கு செஞ்சிலுவைச் சங்க அணிகள் அத்தியாவசிய தனிப்பட்ட பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகின்றன.
மூத்தவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை ஒழுங்கமைத்து வழங்குகின்றன மற்றும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன என அந்த ஒட்டாவா பொது சுகாதாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் தொற்று நோயின் முதல் அலையின்போது நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 243 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டாவாவின் உள்ள கார்லிங்வியூ மேனர் பராமரிப்பு மையத்தில் மட்டும் வசந்த காலத்தில் ஏற்பட்ட தொற்று நோய்க்கு 60 போ் இறந்தனர்.
எக்ஸ்டெண்டிகேர் நடத்தும் ஒட்டாவாவில் உள்ள வெஸ்ட் எண்ட் வில்லா நீண்டகால பராமரிப்பு இல்லம் தற்போது தொற்று நோயின் பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இங்கு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி தொடங்கிய புதிய தொற்று பரவலால் 19 போ் உயிரிழந்தனர்.
ஒட்டாவாவில் உள்ள 14 நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.