பெலாரஸ் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெலாரஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் ஜனாதிபதி லூகஷென்கோ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டு எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
எதிர்க்கட்சிகள் விடுத்த அழைப்பின்பேரில் கடந்த இரு மாதங்களாக தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளைக் கையாண்டு போராட்டக்குழுவினரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை தலைநகர் மின்ஸ்கில் நடந்த போராட்டத்தை கலைப்பதாகக் கூறி, கைக்குண்டுகள், கண்ணீர் புகைக் குண்டுகளை பொலிஸார் பயன்படுத்தியதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலாரஸ் உள்துறை அமைச்சக செய்த்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பெலாரஸில் அமைதியை கொண்டு வருவரும் நோக்கில் ஜனாதிபதி அலெக்சாண்டர் லூகஷென்கோவுக்கு எதிரான தடைகளை கொண்டு வரத் தயார் நிலையில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.