கொரோனா வைரஸூக்கு எதிரான இயல்பான தடுப்பாற்றலை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது அறமாகது. அத்துடன் அது அர்த்தமற்ற வாதம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகமானோருக்கு கொரோனா தொற்று நோய் பரவுவதன் மூலம் இயல்பான தடுப்பாற்றல் உருவாகிவிடும் என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ் உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெரும்பாலான மக்களிடம் பரவினால் அது இயல்பான தடுப்பாற்றலை உருவாக்கும் என ஏற்படுத்தும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர்.
இவ்வாறு கூறிக்கொண்டு சமூக முடக்கல்களை அமுலாக்காமல் இயல்பாக இருப்பதன் மூலம் பொருளாதார அழிவுகளிலிருந்து மீளலாம் என்று சிலர் நம்புகின்றனர்.
பெருந்தொற்று நோய் ஒன்று ஏற்பட்டு பெரும் கேடு ஏற்படும் போது அதனை அனைவருக்கும் பரவவிட்டு பொதுவான நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் எனக் காத்திருக்கும் வரலாறு உலக வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை எனவும் கேப்ரியேசஸ் சுட்டிக்காட்டினார்.
அதிகமானவா்களுக்கு கொரோனா தொற்று பரவுதன் மூலம் இயல்பான நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதற்கு இதுவரை எந்தவிதமான ஆதரங்களும் இல்லை. அப்படியிருக்கும்போது தொற்று நோயை அதிகமானோருக்கு பரவ விட்டு அதனைக் கட்டுப்படுத்த நினைப்பது சாத்தியமற்றது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த ஒரு சிறியளவான விஞ்ஞான ரீதியான விளக்கங்களே எங்களிடம் உள்ளன. அது குறித்த முழுமையான விளக்கம் யாரிடமும் இல்லை. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவா்கள் கூட மீண்டும் தொற்றுக்குள்ளாகி வருவதை நாங்கள் காண்கின்றோம் .
பெரும்பாலானோருக்கு தொற்று ஏற்பட்ட பின்னர் தடுப்பாற்றல் மேம்பட்டிருக்கலாம். ஆனால் அந்தத் தடுப்பாற்றல் எத்தனை காலத்துக்கு நீடிக்கும்? என்பது தெரியவில்லை. . ஏனெனில் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது, அத்துடன் ஒவ்வொருவருக்குக்கும் ஒவ்வொரு விதமாக வினையாற்றுகிறது.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் உலகில் 10 வீதத்துக்கும் குறைவான மக்களிடத்தில்தான் உள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் இன்னமும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் நிலையில்தான் உள்ளனர்.
சமீபமாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தினசரி கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பாற்றல் குறித்து தப்பாகப் புரிந்து கொண்டு தொற்று நோய் பரவுவதை அனுமதிப்பது அறமற்ற செயல் எனவும் உலகச் சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்