கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒன்ராறியோ மாகாண விவசாயம் மற்றும் பண்ணைத் துறை சார்ந்தோர் தொற்று நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோ விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைகளில் தொற்று நோய் இனங்காணப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தல், கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் புதிய நிதி உதவிகளைப் பெற முடியும்.
இதற்காக மத்திய அரசினால் 11.6 மில்லியன் டொலர் ஒன்ராறியோ மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் விவசாயத் துறைக்கு உதவும் வகையில் கடந்த மாத சிம்மாசன உரையில் அறிவிக்கப்பட்ட 35 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை பகிர்ந்தளிக்கும் பொறுப்பு ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் வசமே உள்ளது.
தொற்றுநோயின் முதல் அலையின்போது விண்ட்சர்-எசெக்ஸ் பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தித் துறை சார் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல பண்ணைகளில் கொத்தணித் தொற்றுக்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய, மாகாண அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.
ஒன்ராறியோவில் 837,000-க்கும் மேற்பட்ட உணவு உற்பத்தித் துறை சார்ந்த பணியாளர்கள் உள்ளதாக மாகாண அரசு குறிப்பிட்டுள்ளது.