போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் படைகள் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் இந்நாடுகளில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் தான் மத்தியஸ்தம் வகித்ததாக ரஷ்யா கூறிக்கொண்டாலும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இதற்குக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தன.
எனினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதும் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் படைகள் பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருவதாக அங்குள்ள சர்வதேச செய்தியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நாகோர்னோ-கராபாக் நகரமான மார்டூனியில் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்குள்ள ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை ஒப்புக்கொள்ளப்பட்ட மனிதாபிமான போர் நிறுத்த உடன்படிக்கையை அர்மீனியா கடுமையாக மீறுவதாக அஜர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது.
அஜர்பைஜான் பிரதேசங்களான கோரன்பாய், அக்தாம் மற்றும் டெர்ட்டர் பகுதிகளை நோக்கி அர்மீனியப் படைகள் தொடர்ந்து ஷெல்களை வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக அஜர்பைஜான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாகிஃப் தர்கியாஹ்லி நேற்று தெரிவித்தார்.
தமது படைகள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறவில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுஷன் ஸ்டெபன்யன் மறுத்துள்ளார்.
ஆர்மீனியாவின் தெற்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் அஜர்பைஜான் பீரங்கித் தாக்குதல்களை நடத்திவருவதாக அவர் கூறினார்.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் படைகளிடையே செப்டம்பர் 27-ஆம் திகதி வெடித்த இந்த மோதல் 1991-94 ஆம் ஆண்டில் நாகோர்னோ-கராபாக் மீதான போருக்குப் பின்னர் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.