சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றுக்கு 14 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று(14) வீசிய கடும் காற்று காரணமாக இன்று மட்டும் 13 வீடுகள் சேதமடைந்துள்ளது.
நேற்று நெடுங்கேணி புளியங்குளத்தில் ஒரு வீடு உட்பட கடந்த இரு நாட்களில் மொத்தமாக 14 வீடுகள் காற்றின் வேகம் காரணமாக கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இவ் அனர்த்தத்தினால் 36 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா செட்டிகுளம் போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் காரணமாக இன்று மட்டும் 13 வீடுகள் பகுதியளவில் கூரைகள் சேதமடைந்துள்ளது. அந்தவகையில் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு குடும்பம், வவுனியாவில் தாண்டிக்குளத்தில் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இரண்டு குடும்பங்களும்,
கள்ளிக்குளத்தில் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு குடும்பம், வவுனியா தெற்கில் பிரப்பமடுவில் எட்டு அங்கத்தவர்களைக் கொண்ட நான்கு குடும்பங்கள், கற்குணாமடுவில் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு குடும்பம், ஏக்கர் 20/40/60 இல் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட இரண்டு குடும்பங்களும்,
வெங்கலச்செட்டிகுளத்தில் முதலியாகுளத்தில் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு குடும்பம், கண்ணாட்டியில் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட இரண்டு குடும்பம் என மொத்தமாக 14 குடும்பங்களின் 36 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
எனினும் தமது வீடுகளில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக முற்பணம் பத்தாயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் சேதமடைந்த ழுமுமையான தொகையினை இழப்பீடாக பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மாவட்ட செயலக்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா